பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அனர்த்த நிலையிலுள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7000 பேர் தங்கியுள்ளனர். அவர்களை 02 அல்லது 03 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிவாரண உதவிகளைப் பகிர்ந்தளிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின்,1904 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மண்சரிவு அல்லது அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தவர்களை குடியமர்த்துவது தொடர்காக அவர் தெரிவித்ததாவது;
இவர்களுக்கு வழங்க முடியுமான பொருத்தமான அரச காணிகளின் தகவல்களை வழங்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளில் ஆபத்து இல்லை எனக் கண்டறியப்பட்டால், அவர்களை மீண்டும் அந்த வீடுகளிலேயே குடியேற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
வீடுகளை முழுமையாக இழந்தவர்களைக் குடியமர்த்துவதே தற்போதுள்ள பிரதான சவாலாகும். இதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டத்தை விரைவாகச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.










