நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு கூட்டத்தில் மலையக கட்சிகள் பங்கேற்காதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராகவே நவம்பர் 21 ஆம் திகதி இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது என எதிரணிகள் அறிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி , பிவிதுரு ஹெல உறுமய , மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா மகாஜன கட்சி என்பன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மலையகத்தின் இரு பிரதான கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன இக்கூட்டத்தில் பங்கேற்காது என தெரியவருகின்றது.
புதிய எதிர்க்கட்சி கூட்டணி தொடர்பில் அறிவிப்பு விடுப்பதற்காக கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பிலும் மேற்படி கட்சிகள் பங்கேற்கவில்லை என தெரியவருகின்றது.










