இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கென ஒரு தனித்துவம் இருக்கின்றது. இந்த பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா சார்பாக மூவர் களமிறக்கப்பட்டுள்ளோம். இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மக்கள் செவ்வாக்கு மிக அதிகமாகவே இருக்கின்றது. எனவே மூவரும் வெற்றி பெறுவது உறுதி.
நுவரெலியா மாவட்டத்தில் இத்தேர்தலில் யானை சின்னத்தில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
தலவாக்கலை விடுதியில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க ரீதியில் மலையக மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்கு எந்தவித அரசியல் வேறுபாடுமில்லாமல் சேவை செய்துள்ளது.அதன் காரணமாகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி எந்த ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை எவராலும் அழித்துவிட முடியாது.
இந்த நாட்டின் அரசியல் தலைவர்களான அனைவரிடமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும் அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மீதும் மிக உயர்ந்த நன்மதிப்பு தொடர்ச்சியாக இருந்துவருகிறது. இதற்கு காரணம் காங்கிரசின் முடிவுகள் அனைத்தும் கொள்கை ரீதியானதாகவும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் இருந்து வந்ததே யாகும். ஆதனால் எவரிடமும் தலைநிமிர்ந்து தைரியமாக பேசக்கூடிய வல்லமை காங்கிரசி ற்கு மட்டுமே இருக்கிறது.
எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மட்டுமே மலை யக மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதை மலையக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். இ.தொ.கா.வின் சேவை மலையக மக்களுக்கு என்றும் தேவை எனவே தொடர்ந்து மலையக மக்களுக்காக இ.தொ.காவின் மக்கள் பணி தொடரும்.
நாம் அளித்த சில வாக்குறுதிகளை பாராளுமன்ற தேர்தலின் பின்னர் படிப்படியாக நிறைவேற்றுவோம். மலைய மக்களுக்கு பல மடங்கு சேவைகள் செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காத்துக்கொண்டிருக்கின்றது. இம்முறை தேர்தலில் அதிக சுயேட்சை குழுக்கள் நுவரெலியா மாவட்டத்தில் களம் இறக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் திட்டமிட்டு எமது வாக்குகளை சிதறடிக்கவே இவ்வாறு களமிறக்கப்பட்டுள்ளது. எனவே நாம் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
தலவாக்கலை பி.கேதீஸ்
