ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தேர்தலுக்கான மொட்டு கட்சியின் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தல் நடந்தாலும், பொதுத்தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்வதற்கு நாம் தயார். யார் என்ன சொன்னாலும் இலங்கையில் உள்ள பலமான கட்சி எமது கட்சி என்பதே உண்மை. தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாட்டு பணிகள் இடம்பெற்றுவருகின்றனர். நாளை தேர்தல் வைத்தாலும் நாம் தயார். முதலில் பொதுத்தேர்தலை நடத்தினால் நல்லது. இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
பஸில் ராஜபக்ச இம்மாதம் நாட்டுக்கு வருவார்;. அவர்போல் அரசியல் வியூகம் வகுத்து செயற்படக்கூடிய தலைவர் கிடையாது. பஸில் வந்ததும் தேர்தல் பற்றி முடிவெடுக்கப்படும்.” – என்றார்