மே நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைப்பு?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமெனில் தற்போதைய நாடாளுமன்றம் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் கலைக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜுலை 15 ஆம் திகதி தீர்க்கமான நாளாகும். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு விடுக்கும் காலப்பகுதியாகும். அக்காலப்பகுதியில் அதற்கான அறிவிப்பை ஆணைக்குழுவினர் விடுத்தாக வேண்டும்.

எனினும், தற்போது நாடாளுமன்ற தேர்தல் பற்றியும் பேசப்படுகின்றது. ஜுலை 15 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமெனில் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு மே நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் ஜுலை மாத நடுப்பகுதிக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

அதேவேளை, எந்தவொரு காரணத்துக்காகவும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு ஒத்திவைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெறுகின்றது எனக்கூறியும் அதனை செய்யமுடியாது. ஜுலை நடுப்பகுதியில் கட்டாயம் அறிவிப்பை விடுத்தாக வேண்டும்.

அடுத்தது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் கூறமுடியாது. உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது கையாண்ட இந்த விளையாட்டு ஜனாதிபதி தேர்தலின்போது எடுபடாது. ஏனெனில் பாதீட்டில் 10 பில்லியன் ரூபா ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால்கூட ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அதற்காக பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்திவிட்டு, ஜனாதிபதி தேர்தலை நடத்த நிதி இல்லை என கூறமுடியாது.” – என்றார்.

Related Articles

Latest Articles