ஜனாதிபதி தேர்தலில் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மொட்டு கட்சியில் களமிறங்க தம்மிக்க பெரேராவுக்கு உள்ள தகைமைகள் எவை? அவரை களமிறக்கும் முடிவை கட்சி இன்னும் எடுக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் நிறைவேற்றுக்குழுவே தீர்மானிக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை வளைத்துபோடுமாறு ஜனாதிபதிக்கு எந்தவொரு நிபந்தனையையும் மொட்டு கட்சி விதிக்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்பது மட்டுமே எமது நிபந்தனை.
பொதுவேட்பாளராக, பொது கூட்டணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார். ஜனாதிபதி தேர்தலுக்கு அவர் யானை சின்னத்தில் வரமாட்டார். ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் முடிவையே மொட்டு கட்சி எடுக்கும் என நம்புகின்றேன்.” – என்றார்.
