ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழுக் அடுத்த இரு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில், பஸில் ராஜபக்சவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின்போது தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.
அமெரிக்காவில் இருந்து பஸில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர், மஹிந்தவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் பஸில் சந்திப்பு பேச்சு நடத்தி இருந்தார்.
இதன்போது அடுத்த தேர்தல், அரச கூட்டணி உறவு மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு ராஜபக்சக்கள் நேரடி பதிலை வழங்கவில்லை.
இந்நிலையிலேயே மொட்டு கட்சியின் உயர்பீடம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் எட்டப்படும் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவுடன் மஹிந்த, பஸில் 2ஆம் சுற்று சந்திப்பை நடத்தவுள்ளனர்.
இச்சந்திப்பின்போது அடுத்த தேர்தல், கூட்டணி தொடர்பில் இறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.










