இம்மாதம் பத்தாம் திகதி 1700 ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தொழிலாளர்கள், ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம்பள விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது – என்று கொத்மலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் செந்தில் குமார் தெரிவித்தார்.
அதேநேரத்தில் பெருந்தோட்ட கம்பெனிகள் 1700 ரூபாவை வழங்க முன்வந்தால் நல்லது, அவ்வாறு இல்லையேல் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் செந்தில் குமார் மேலும் கூறியவை வருமாறு ,
“ பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்து தொழில் அமைச்சு இரண்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை வழங்கி இருந்தது.
இவ்வாறு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி 21 பெருந்தோட்ட கம்பனிகள் சார்பாக பெருந் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாலும், இடைக்கால தடை உத்தரவு கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதன் மூலம் அக மகிழ்வு அடைத்த தோட்ட தொழிலாளர்கள் , நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று ஆலயங்களில் பூஜைகளில் ஈடுப்பட்டு, பட்டாசு கொளுத்தி ஆரவாரத்திலும் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் பெருந்தோட்ட நிர்வாகங்கள் ஜூன் மாத சம்பளம் 1700 ரூபா உயர்வுடன் வழங்கும் எனவும் தமது பொருளாதார சுமை ஓரளவு தீரும் என்ற நம்பிக்கையில் ஆசைகளை வளர்த்திருந்தனர் .
ஆனால் 1700 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானி தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (04) அன்று இடம்பெற்ற விசாரணையின் பின் வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் அவர்கள் வளர்ந்திருந்த நம்பிக்கைக்கு பாதகம் ஏற்பட்டுவிட்டதாக உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அரசாங்கம்மீது தொழிலாளர்களுக்கு இருந்த நம்பிக்கை சிதைந்துள்ளது. 1,700 ரூபா கிடைக்குமா என்ற கேள்வியும் எழந்துள்ளது.
எனவே, இந்த சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் , பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேசி தீர்க்கமான முடிவை எடுக்க கட்சி பேதங்களை மறந்து பெருந் தோட்ட மக்களின் வாழ்வாதார உழைப்பில் ஒரு தொகை பணத்தை சந்தா பணமாக பெற்று கொள்ளும் மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன் வர வேண்டும்.’’ – என்றார்.
ஆ.ரமேஸ்
