வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இன்று காலை அந்தக் காணியின் ஒரு பகுதி அதன் உரிமையாளர்களால் அபிவிருத்திப் பணிகளைச் செய்வதற்காக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகழப்பட்டது.
இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி – 56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்குப் பயன்படும் 450 ரவைகள் தென்பட்டன.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை, அந்தப் பகுதியில் 1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்திய இராணுவத்தின் முகாம் ஒன்று இயங்கியதுடன், அதற்கு அண்மித்த பகுதியில் யுத்த காலத்தில் புளொட் இயக்கத்தின் முகாம் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.