கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் கட்டாயம் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவிப்புகளை விடுத்துவருகின்ற நிலையில், தடுப்பூசி திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாக மடக்கும்புர பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொத்மலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட மடம்கும்புர பிரிவிலுள்ள தோட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் 30 முதல் 59 வயது பிரிவினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், சில தோட்டங்களில் இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
“மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் முதல்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் எமது பகுதிகளில் 30 -59 வயது பிரிவினருக்கு இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை.
மலையக தோட்டப்புறங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றாமல் தோட்டத்தொழிலுக்கு கூட செல்வதற்கு அச்சமாக உள்ளது. கடந்தவாரம் தடுப்பூசி ஏற்றப்படுவதாக கூறி வரவழைக்கப்பட்டு ஏமாற்றத்துடனேயே திரும்பினோம். எனவே இனியாவது எம்மை புறக்கணிக்காமல் விரைந்து தடுப்பூசிகளை ஏற்றுங்கள்.” – என்று மடக்கும்புர மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவகர் குறிப்பிடுகின்ற போது, கடந்தவாரம் தடுப்பூசி பற்றாக்குறையால் செலுத்தமுடியாமல் போய்விட்டது.மறுபடி ஏற்றுவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்படும்பட்சத்தில் மடக்கும்புர பகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.” – என்றார்.
மடம்கும்புர தோட்டத்துக்குட்பட்ட சில தோட்டங்களில் 30-59 வயது பிரிவினருக்கும் முதல் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தெற்கு மடம்கும்புர தோட்டத்தில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்
