அடிமை சாசனத்தை இ.தொ.கா. ஆதரிப்பது ஏன்? மலையக மக்கள் முன்னணி விசனம்

மலையக மக்களின் அடிமை விலங்காக இருந்த கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என தொழிற்சங்க போராட்டம் முன்னெடுப்பதற்கு காரணம் தொழிலாளர்களின் நன்மை கருதியா? அல்லது தொழிற்சங்கங்களின் நன்மை கருதியா? ஏன்ற கேள்வி எழுகின்றது.எனவே இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிமை சாசனமாக இருந்த கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் என்பதையே அநேகமான தொழிற்சங்கங்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. ஆனால் மீண்டும் அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவது எதற்காக என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தமானது 1998 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.அன்றைய சூழ்நிலையில் அதில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் பொருத்தமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய கால கட்டத்திற்கு அது பொருத்தமானதா? என்ற கேள்வி எழுகின்றது.

எனவே மீண்டும் ஒரு கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால் பழைய கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியானால் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தொழிலாளர்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் புதிய கூட்டு ஒப்பந்தமானது அமைய வேண்டும். அது சர்வதேச தரத்திலான ஒரு தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தமாக அமைய வேண்டும்.

எனவே புதிய கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால் அதற்காக ஒரு தனி குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் அனைத்து தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்குபற்ற வேண்டும்.

அந்த புதிய கூட்டு ஒப்பந்தத்தில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று அனைத்து தரப்பினரினதும் ஒப்புதல் பெறப்பட்டு அது தொழில் அமைச்சின் ஊடாக அவர்களையும் இணைத்துக் கொண்டு சர்வதேச தரம் வாய்ந்த ஒரு ஒப்பந்தமாக அமைய வேண்டும்.

எனவே இது தொடர்பாக மீண்டும் கூட்டு ஒப்பந்தம் தேவை என கோசம் எழுப்புகின்றவர்கள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles