” ஆசிரியர் சமூகத்துடன் மோத வரவேண்டாம். அவ்வாறு மோதினால் அது உங்களுக்கே ஆபத்தாக அமையும்.” – இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு பதிலடி கொடுத்துள்ளது இலங்கை ஆசிரியர் சங்கம்.
” அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை எவ்வாறு நிறைவுக்கு கொண்டுவரவேண்டும் என்பது எனக்கு தெரியும். அவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை ஒடுக்கி – தோற்கடித்து, பாடசாலைகளை மீள திறக்க வேண்டும்.” என்று எஸ்.பி. திஸாநாயக்க அறிவிப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியவை வருமாறு,

” எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு எதுவும் முடியாது என்பதால்தான் இம்முறை அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை. அவர் வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர். உளறுபவர். அந்த வாயால்தான் சிறைதண்டனைக்கூட அனுபவித்தார். தனக்கு எதாவது பதவியை பெற்றுக்கொள்ளவே இவ்வாறெல்லாம் அறிவிப்பு விடுத்துவருகின்றார்.
தனக்கு நேர்ந்த நிலை என்னவென்பதை கண்காடி முன்னால் நின்று அவர் பார்க்க வேண்டும். ஏற்கனவே நொந்துபோயுள்ள அவரை, ஆசிரியர்களுடன் மோத வரவேண்டாம் என கூறிவைக்க விரும்புகின்றேன். அது அவருக்கே ஆபத்தாக அமையும்.
அதேவேளை, எமது பிரச்சினைக்கு 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். உரிய தீர்வு இல்லையேல் அடுத்தகட்டம் என்னவென்பதை விரைவில் அறிவிப்போம்.” -என்றார்.
