பொகவந்தலாவை டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபர் பொன்னுசாமி பிரபாகரனை (பொன் பிரபா) இடமாற்றம் செய்வதற்கான சதி நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்றுவருவதாக மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் பின்னணியில் அரசியல் பிரமுகர் ஒருவர் செயற்படுவதாகவும், பெற்றோரை தூண்டுவிட்டு அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு தயாராகிவருகிறார் எனவும் தகவல் வெளியிட்டனர்.
அதுமட்டுமல்ல அதிபர் பொன். பிரபாவுக்கு எதிராக சில ஆசிரியர்கள் ஊடாக கையொப்பம் திரட்டப்பட்டுவருவதாகவும், அவர் மீண்டும் டின்சின் பாடசாலைக்கு வரவேக்கூடாது எனவும் சிலர் கங்கணம் கட்டி செயற்பட்டுவருகின்றனர்.
மாணவர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அதிபர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறான திசையில் பயணிக்கும் சில மாணவர்களை நல்வழிப்படுத்தி, பாடசாலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு துணிகரமாக செயற்பட்ட அதிபருக்கு எதிராக அரங்கேறும் சதி நடவடிக்கைகளை முறியடிக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என மலையக சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.










