அனைத்து விடயங்களுக்கும் ஆமாம் போடுவதற்கு அரசமைப்பு பேரவை என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசமைப்புபேரவைமீது கடும் விசனம் வெளியிட்டார்.
அரசமைப்பு பேரவை பிளவுபட்டுள்ளதாகவும், அதன் உறுப்பினர்கள் சிலர் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் செயற்படுகின்றனர் எனவும், இதனால் பொலிஸ்மா அதிபர், நீதிபதிகளைக்கூட நியமிக்க முடியாமல் உள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரசமைப்பு பேரவை இவ்வாறு செயற்பட்டால் இந்த முறைமையை கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் நாட்டை முடக்கும் விடயமாக எடுத்துக்கொள்ளல் ஆகாது என்றும், அரசியலமைப்பு பேரவை என்பது பிறர் இயக்க இயங்கும் பேரவை அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
