அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் மகளிர் தின விழா, 15.03.2022 அன்று கொட்டகலை ரிஷிகேஷ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நாமும் பொறுப்பு சொல்ல வேண்டும் காரணம் நீங்கள் எமக்கு வாக்களித்துள்ளீர்கள்.

இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் எடுத்து கூறியுள்ளோம். விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.

தீர்வுவர வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை. அந்தவகையில் நாங்களும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்.

மலையக பெண்களின் சிந்தனையில் மாற்றம் வேண்டும். உதாரணமாக பெண்களின் கருத்துகள் வரவேற்கப்பட வேண்டும். முதலில் பெண்களை பேச கூடாது என்ற சிந்தனையில் மாற்றம் வேண்டும்.

மலையத்தின் பிரச்சினைக்கு கல்வி முறையே பிரதானமாக உள்ளது. குறிப்பாக ஆரம்ப கல்வி முறையில் மாற்றம் அவசியம் அதாவது ஆரம்ப பாடசாலைகளில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆகவே ஆரம்ப பாடசாலைகளில் கல்விமுறை மாற்றப்பட வேண்டும். இந்த நிலையில், பிரஜா சக்தியூடாக இதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன’. என்றார்.

Related Articles

Latest Articles