” அரசியலில் வீழ்ச்சி கண்டுள்ளவர்கள் மத அடிப்படைவாதத்தை தூண்டிவிட்டு அதன்மூலம் மீண்டெழுவதற்கு முயற்சிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நபரொருவருக்கு தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது.இது அரசமைப்பில் உள்ள ஏற்பாடு. எனினும், அந்த உரிமையை பயன்படுத்தி மற்றைய மதங்களை தாக்ககூடாது. ஆனால் சில காரணிகளை அடிப்படையாகக்கொண்டு தாம் கடைபிடிக்கும் மதம்தான் சிறந்தது பிரச்சாரங்கள் முன்னெடுப்படுவதாலேயே மத அடிப்படைவாத பிரச்சினைகள் உருவாகின்றன.
மத அடிப்படைவாதம் ஊடாக தமது கட்சிகளை பலப்படுத்தி கொள்வதற்கும், சரிந்துள்ள தமது செல்வாக்கை கட்டியெழுப்பி கொள்வதற்கும் சிலர் முற்படுகின்றனர். இனத்துக்கு அச்சுறுத்தல், மதத்துக்கு அச்சுறுத்தல் எனக்கூறிக்கொண்டு அவர்கள் வரலாம். ஒரு கட்டத்தில் தேசப்பற்றை பயன்படுத்தலாம். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் மதத்தை முன்னிலைப்படுத்தலாம். சிலவேளை, இனவாதம் பேசலாம்.சில குழுக்களின் செயற்பாடுகள் இதுவாகத்தான் உள்ளது. ” – என்றார்.










