73 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்து செய்தியினை வௌியிட்டுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச
அனைத்து இலங்கையர்களும் 73 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகின்றனர்.
காலனித்துவ காலத்திலிருந்து சுதந்திரத்திற்கான மக்களின் அர்ப்பணிப்பும் போராட்டமும் உலக வரலாற்றில் நன்கு அறியப்பட்டவை.
அரசியல், மத மற்றும் கலாசார ரீதியாக மூலோபாய போராட்டங்கள் மூலம் சுதந்திரம் பெற்ற நீண்ட வரலாற்றை இலங்கை தேசம் கொண்டுள்ளது.
நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் செயல்முறையே இன்று நம் தாய்நாட்டிற்கான தேவையாக உள்ளது. நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தல் மற்றும் மத நல்லிணக்கம் என்பன இதற்கு வலுவான ஆதரவாக அமைந்துள்ளன.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்பளிக்கும் பொருளாதார கொள்கை ஊடாக தாய்நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகரும் பாதையில் நாம் நுழைந்துள்ளோம்.
ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் புரிந்துகொண்டு, மக்களிடம் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக சுதந்திரம் மேலும் அர்த்தமுள்ளதாகும் போது வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு என்பது யதார்த்தமாகும்.
வரலாறு முழுவதும், தாய்நாட்டிற்கு எதிரான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் ஒரு நிலையான கொள்கையில் நாம் செயற்பட்டோம். எத்தனை சவால்கள் வந்தாலும், நாங்கள் ஒருபோதும் நம் தாய்நாட்டை காட்டிக் கொடுத்ததில்லை.
கொவிட் -19 தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். இந்நெருக்கடியிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதற்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். எதிரிப் படைகளைத் தோற்கடிப்பதற்கு போன்றே, கொவிட் -19 தொற்றை தோற்கடிப்பதற்கும் இலங்கை தேசமாக நாங்கள் எழுந்து நிற்போம்.
எங்கள் தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் மகத்தான தியாகங்களைச் செய்த அனைவருக்கும் மற்றும் இன்று அந்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகின்றேன்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
ஒற்றுமையுடன் ஒன்றாக முன்னேறுவதன் மதிப்பு, வரலாற்றின் மிக முக்கியமாக செய்தியாகும்.நாட்டின் இறையாண்மையை உறுதி செய்வதும் உள்ளூர் வளங்களை பாதுகாப்பதும் எமக்கு முன் உள்ள சவாலாகும்.
சபாநாயகர் – மஹிந்த யாப்பா அபேவர்தன
உலகளாவிய ரீதியில் கொவிட்19 நெருக்கடியை எதிர்கொண்டுள்ளபோதும் நாம் இலங்கைத் தேசமாக ஐக்கியத்துடன், ஒன்றுபட்ட மனதுடன் வளமான தேசமாக முன்னேற வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் 73ஆவது தேசிய சுதந்திர தினத்தைப் பெருமையுடன் கொண்டாட மீண்டும் ஒன்றிணைந்துள்ளோம்.
காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றபோது இந்நாட்டிலிருந்த சகல இனத்தவர்களும் ஒன்றிணைந்து, ஐக்கியத்துடன் செயற்பட்டமை அசைக்க முடியாத பலமாக இருந்தது.
இனம், மதம், குலம், நிறம், வகுப்பு மற்றும் கட்சி போன்ற குறுகிய வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்படாமையால் அன்று இலங்கையர்களின் மனங்களிலும், இதயங்களிலும் சுதந்திரம் தொடர்பான எண்ணம் வலுவாக இருந்தது. அன்று சுதந்திரம் பெற்ற இலங்கைத் தாயும் அதன் பிள்ளைகளும் இன்றுவரை வந்துள்ள பயணம் இலகுவானதல்ல. கடந்த காலத்திலிருந்து எதிரிகளின் அச்சுறுத்தல், நோய் பயம் உள்ளிட்ட சகல அச்சுறுத்தல்களின் மத்தியிலும் இந்த நீண்ட பயணத்தில் உயிரைப் பாதுகாப்பதற்கு அன்புக்குரிய பிள்ளைகள் பின்னிற்கவில்லை. எனவே, இந்த வருட சுதந்திர தினத்தைப் பெருமையுடனும், மரியாதையுடனும் கொண்டாடுகின்றோம்.
‘வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு’ என்ற தொனிப்பொருளில் இவ்வருட சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட அனைத்து இலங்கையர்களும் குறுகிய வேறுபாடுகளை மறந்து நிலையான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும். எனவே, இந்த மகத்தான சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த வளம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்ப இப்பெருமை மிக்க தருணத்தில் உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்
அந்நிய ஆதிக்கத்திலுருந்து நாடு விடுதலைப்பெற்று 73 வருடங்களை எட்டிப்பிடித்துள்ளது. சுதந்திர நாடொன்றின் இறையாண்மையைப் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறையை உருவாக்குதல் எண்ணும் இலக்கோடு நாடு பயணிக்கும் இந்த இனிய சூழலில், சுதந்திர இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்ற இந்த நாட்டில் ஒரு நிரந்தர சமாதானத்தை இலங்கைத் தாய் தந்தருள எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
மலையகத்திலும், இந்த நாட்டின் இதர பகுதிகளிலும் வசித்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் அவர்களது உரிமைகள் சலுகைகள் எல்லாவற்றிலும் விடுதலை பெற்ற மக்களாக இருக்க வேண்டும் என்பது எமது வாஞ்சை “பாதுகாப்பான தேசம் சுபிட்சமான நாடு” என்பதற்கு அமைவாக எமது கட்டுக்கோப்பை மேலும் பலப்படுத்தி இதன் வாயிலாக எமக்குரிய உரிமைகள் , சலுகைகள் ஆகிவற்றை பெற்றுக்கொள்வதற்கு இதன் 73ஆவது சுதந்திர தினத்தில் நாம் திடசங்கற்பம் எடுத்துக் கொள்வோம்.
இத்தினத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் என்ற திடமான நம்பிக்கையோடு நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் சகல இனங்களின் மத்தியிலும் சௌபாக்கியம் , ஐக்கியம் , சமத்துவம் , சுபிட்சம் நிறைந்த எதிர்காலம் அமைய வேண்டுமென பிராத்திக்கின்றேன்.
பிரதமரின் இணைப்பு செயலாளர் – செந்தில் தொண்டமான்
நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக, அனைவரும் ஒன்றிணைந்துப் பாடுபட்டால் மாத்திரமே, இலங்கை அடைந்த சுதந்திரம் அர்த்தபுஷ்டியானதாக மாறும்.
“நழிவடைந்துள்ள சகல துறைகளும் கட்டியெழுப்பப்பட்டு, பொருளாதார ஸ்திரமிக்க நாடாக எமது நாட்டை உயர்த்த வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை என்பதை இந்நாளில் நினைவூட்டிப் பார்ப்பதே சிறந்தது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கரங்களைப் பலப்படுத்தி, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை சுபீட்சமானதும் வளமிக்கதுமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் குறிக்கோளாக அமைய வேண்டும்.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட்டிருந்தாலும், இலங்கையர் என்ற சுய அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. அந்தச் சுய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக, அர்த்தபுஷ்டியுடன் பணியாற்ற முன்வருமாறு நாட்டின் வளர்ச்சி பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
இலங்கையின் 73ஆவது ஆண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனது இனிய மக்களுக்கு, சுதந்திரதின நல்வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
