அரையிறுதிக்குள் நுழையப்போகும் அணிகள் எவை?

ஏற்றமும் இறக்கமும் மனித வாழ்க்கையின் அங்கமாக இருப்பது போன்று தான் விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் பிரிக்க முடியாத இரண்டு அம்சங்களாகும்.

மேற்கிந்தியதீவுகளும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து நடத்துகின்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் முதற்தடவையாக இருபது அணிகள் பங்கேற்ற நிலையில், முன்னாள் சம்பியன்களான இலங்கையும், பாகிஸ்தானும், சலகதுறை ஆட்டக்காரர்கள் பலரை தம்வசம் கொண்ட பலம் வாய்ந்த அணியான நியூசிலாந்தும் முதல் சுற்றுடன் வெளியேறியது.

இவர்கள் இந்த தொடரிலிருந்து வெளியேறினாலும் முதற்தடவையாக களமிறங்கிய அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் அடுத்த சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியமை இரசிகர்கள் மத்தியில் பலம் வரவேற்பை பெற்றுள்ளது.

தென் ஆபிரிக்கா, அமெரிக்கா அணிகளுக்கிடையில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியுடன் சுப்பர் 8 சுற்று ஆரம்பமாகின்றது.

ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அணிகள் வீதம் நான்கு குழுக்களாக பிரிந்து முதல் சுற்றில் விளையாடியிருந்தன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

குழு ஏ இலிருந்து இந்தியாவும், அமெரிக்காவும், குழு பி இலிருந்து அவுஸ்திரேலியாவும், இங்கிலாந்தும், குழு சி இலிருந்து மேற்கிந்திய தீவுகளும், ஆப்கானிஸ்தானும் , குழு டி இலிருந்து தென் ஆபிரிக்காவும், பங்களாதேஷம் சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

சுப்பர் 8 சுற்றும் இரண்டு குழுக்களின் அடிப்படையில் நடைபெறுகின்றதுடன் முதலாவது குழுவில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்திய அணிகளும் இரண்டாவது குழுவில் இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு செல்லும.

முதலாவது குழுவிலிருந்து அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் இரண்டாவது குழுவிலிருந்து நடப்புச் சம்பியன் இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் அரை இறுதிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

சுரேஸ் குமார் பேனா

Related Articles

Latest Articles