“அஸ்வெசும திட்டத்தை குழப்பி நாட்டை முடக்க சதி”

” சரியான முறையில் முகாமைத்துவச் செயற்பாடுகளை சீர்படுத்துவதற்காகவே வங்கிகள் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளன. அதனால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. ” – என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

” ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உரியவர்களுக்கு மாத்திரம் சலுகைகளை பெற்றுக்கொடுக்கவே அரசு முயற்சிக்கிறது. அதற்கான தரவுகளை வழங்குவோர் உண்மையான தரவுகளை வழங்க முடியும்.

பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியிலும் அரசு உரியவர்களுக்கு சலுகைகளை வழங்கவே முயற்சிக்கிறது. அரசியல் தொடர்புகளை கருத்திற்கொண்டு சலுகை வழங்கும் செயற்பாடுகள் இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படாது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெறுவதற்கு சென்ற போது எத்தனை பேர் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். சரியான முறையில் முகாமைத்துவச் செயற்பாடுகளை சீர்படுத்துவதற்காகவே வங்கிகள் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளன. அதனால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது.

தற்போது அஸ்வெசும திட்டத்தை குழப்பி சிலர் நாட்டை முடக்க பார்க்கிறார்கள். பாரம்பரிய எதிர்கட்சிகளின் கொள்கைகளுடன் மோத வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை சாதாரண நாடாகும். இங்கு எவரேனும் சூழ்ச்சி செய்ய முற்பட்டால் நல்ல பலன்களை நாம் அடைய முடியாது. அதனால் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைபோடுவதற்கு மாத்திரமே முடியும். எவ்வாறாயினும் அரசு தூரநோக்குடனேயே செயற்படுகின்றது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles