ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சிக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்

எந்தச் சூழ்ச்சித் திட்டங்களாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டு மக்கள் தற்போது என் பக்கமே நிற்கின்றார்கள். சர்வதேச சமூகமும் எனக்கு ஆதரவு வழங்குகின்றது. அதனூடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில், தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் – பணிப்புறக்கணிப்புக்கள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.

வரி விதிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. சர்வதேசத்திடமிருந்து வாங்கிய – வாங்குகின்ற கடனை அடைக்க வரி விதிப்பு மிகவும் அவசியம். அரசுக்கு மிரட்டல் விடுக்கும் தொழிற்சங்கத்தினர் இது குறித்து அறிந்திருப்பார்கள்.

எதிர்க்கட்சிகளுக்குள் பிளவுகள் இருப்பது போல் தொழிற்சங்கங்களுக்குள்ளும் பிளவுகள் உள்ளன. இவற்றில் சுயலாப சிந்தனை கொண்டவர்கள் போராட்டங்களை நடத்துகின்றார்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles