” நான் பதவி, பட்டங்களுக்கு ஆசைப்படும் அரசியல்வாதி அல்லன். பிரபாகரனை தோற்கடித்தமை உட்பட பல அரசியல் புரட்சிகளில் ஈடுபட்டுள்ளேன். எதிர்காலத்திலும் ஈடுபடுவேன். தற்போதைய சூழ்நிலையில் ஆட்சிமாற்றத்துக்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் பதவியை நான் கேட்பதாக ஒரு கட்டத்திலும், அதன்பின்னர் கூட்டணிக்குள் நான் சூழ்ச்சி செய்வதாகவும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல பிரதமர் வேட்பாளர் பதவியை கோருவதாகவும் தகவல் பரப்பட்டது. ஒரு விடயத்தை நான் இங்கு தெளிவாக குறிப்பிட்டாக வேண்டும், பதவி, பட்டங்களுக்காக செயற்படும் அரசியல்வாதி நான் கிடையாது. எனது சுயமுயற்சியாலேயே அரசியலில் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். மாறாக எனது பெற்றோரை காண்பித்தோ அல்லது அரசியல் வாதிகளின் முதுகில் தொங்கியோ இங்கு வரவில்லை.
நாம் அரசியலுக்கு வந்து, இந்த நாட்டில் செய்யமுடியாமல் இருந்த பல அரசியல் மாற்றங்களை – புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம். குறிப்பாக பிரபாகரனை தோற்கடித்தமை உள்ளிட்ட விடயமும் இதில் அடங்கும். எனவே, எதிர்காலத்திலும் நாம் அவ்வாறு செயற்படுவோம். அதிகாரம் தொடர்பில் எமக்கு கவலை கிடையாது.
மக்கள் ஆசியுடன் அவர்களின் விருப்பத்துக்கமைய கிடைப்பதே அரசியல் வரம், பலமாகும். மக்களை சரியான திசையை நோக்கி அழைத்துச்செல்வதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். மக்களும் தற்போது மாற்றம் குறித்து சிந்தித்துள்ளனர். அரசுமீதான நம்பிக்கையும் இல்லாதுபோயுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஆட்சிமாற்றத்துக்கான ஒத்துழைப்பை நான் வழங்கமாட்டேன். ஏனெனில் ஆட்சியை பொறுப்பேற்று, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லமுடியாத அளவுக்கு நாட்டின் நிலைமை தற்போது காணப்படுகின்றது. கட்சி தாவல்கள் ஊடாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது. எனவே, மக்கள் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.” – என்றார்.










