உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய போர் 500 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் ராணுவ வளங்கள் ஏறத்தாழ தீர்ந்துவிட்டன என ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார்.
சோவியத் ரஷ்யாவை எதிர்க்க 1949ம் ஆண்டு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ‘நேட்டோ’! சோவியத் வீழ்ந்த பின்னரும் இந்த அமைப்பு கலைக்கப்படாமல் தொடர்ந்தது. மட்டுமல்லாது, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக, ரஷ்யாவின் முன்னாள் நாடான உக்ரைனையே தனது வசம் கொண்டு வந்துவிட்டது. இதுதான் தற்போதைய போருக்கு முக்கிய காரணம். ஏனெனில் என்னதான் ரஷ்யா உலகின் மிகப்பெரிய நாடாக இருந்தாலும் அந்த நாட்டுக்கே கணிசமான அளவில் தானியம் உக்ரைனிலிருந்துதான் போகிறது.
போதாத குறைக்கு உக்ரைன் ரஷ்யாவின் பக்கத்து நாடு வேற. எனவே நேட்டோ வந்துவிட்டால் அமெரிக்காவின் படைகள் ரஷ்யாவின் பக்கத்திலேயே நிலை நிறுத்தப்படும். ஏற்கெனவே ரஷ்யாவும்-அமெரிக்காவும் பரம எதிரிகள். இப்படி இருக்கும்போது எப்படி பரமா உங்க படைகள் எங்க நாட்டுக்கு பக்கதுல நிக்க வைக்கலாம்? அதுக்கு நீ எப்படி இடம் கொடுக்கலாம்? என உக்ரைன் மீது ரஷ்யா பாய போர் தொடங்கி விட்டது. உக்ரைனிடம் சொந்தமாக அவ்வளவு ஆயுதம் எல்லாம் கிடையாது.
ஆனால் அமெரிக்கா இருக்கே! யப்பப்பா.. இதுவரை சுமார் ரூ.3.6 லட்சம் கோடியை அளவுக்கு உக்ரைனுக்கு ஆயுத உதவியை செய்திருக்கிறது. இவ்வளவு பெரிய இந்தியாவுக்கே ரூ.6.7 லட்சம் கோடிதான் செலவாகிறது. ஆனால் அதில் பாதியளவு ஆயுதங்களை மிக்சிறிய நாடான உக்ரைன் அமெரிக்காவிடமிருந்து பெற்றிருக்கிறது. எனவே ரஷ்யா தனது எல்லை பாதுகாக்க உக்ரைனுடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த போர் 500 நாட்களை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைன் ஏராளமான இழப்புகளை சந்தித்துள்ளது.
போர் காரணமாக 60 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைனியர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 9,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 15,700க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் நேட்டோவிலிருந்து விலகுவதாக உக்ரைன் அறிவிக்கவில்லை. ரஷ்யாவும் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்நிலையில், உக்ரைன் திடீரென பதில் தாக்குதலில் ஈடுபட்டது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது அதிரடியாக ட்ரோன் தாக்குதலை நடத்தியது. அதேபோல கருங்கடல் பகுதியில் இருந்த ரஷ்ய கப்பல்கள் மீதும் சில எதிர்பாராத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் சில ரஷ்யாவுக்கு லைட்டாக அடி இருந்தாலும், அது சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்த எதிர் தாக்குதலை முறியடித்தது.
இந்த சூழலில் உக்ரைனின் ராணுவ வளங்கள் அனைத்தும் ஏறத்தாழ அழிக்கப்பட்டுவிட்தாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார். மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், “மேற்கு நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பா) ஆயுத உதவி இருந்தபோதும் உக்ரைனால் எங்களை தோற்கடிக்க முடியவில்லை. சமீபத்திய நிகழ்வுகள் உக்ரைனிடமிருந்த ராணுவ வளங்கள் கிட்டதட்ட காலியாகிவிட்டதை எங்களுக்கு காட்டுகின்றன” என்று கூறியுள்ளார்.










