” இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்தினால் வாக்கு வங்கி முழுமையாக சரியும் என்பதாலேயே அவற்றை அரசாங்கம் மறைத்துவருகின்றது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
தனியார் ஊடகமொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வொன்றில் பங்கேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக கூறியவை வருமாறு,
” இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை தகவல் அறியும் சட்டத்தின்கீழ் நாம் கோரியுள்ளோம். உரிய காலப்பகுதிக்குள் அவை வழங்கப்படவில்லை. இதன்மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தையும் அரசாங்கம் மீறியுள்ளது.
பாதுகாப்பு, வலுசக்தி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்களும் நாட்டுக்கு நன்மை பயக்கும் ஒப்பந்தங்கள் எனில் அரசாங்கம் அவற்றை பகிரங்கப்படுத்தாமல் இருப்பது ஏன்? நாட்டுக்கு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள் என்பதாலேயே மறைக்கப்படுகின்றன.
நன்மை பயக்கும் ஒப்பந்தங்கள் எனில் தேர்தலுக்கு முன்னர் அவற்றை வெளியிட்டு வாக்கு வேட்டை நடத்தி இருப்பார்கள். மேற்படி ஒப்பந்தங்களை வெளியிட்டால் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி மீண்டும் 3 சதவீதத்துக்கு செல்லக்கூடும். அதனால்தான் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது.” – என்றார்.