இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ரி – 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் இறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இருவரும் அரை சதமடித்தனர்.
இறுதியில், 17.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.










