இந்திய அரசாங்கத்தின ஊடாக சிறிய முதலீடுகளை மலையகத்திற்கு கொண்டு வருவதற்கான யோசனை ஒன்றை தான் முன்வைத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகத்துக்கும், கண்டி இந்திய உதவி தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று அண்மையில் கண்டி உதவி இந்திய தூதுவராலயத்தில் இடம்பெற்றது.இந்த சந்திப்பில் உதவி தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கிருஸ்ண பிரசாத்தும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கின்ற பொழுதே பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சங்கரன் விஜயசந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கண்டி இந்திய துனைத் தூதுவராலயத்திற்கு புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள கண்டி இந்திய உதவி தூதுவர் ராகேஸ் நடராஜனை மரியாதை நிமித்தமான சந்தித்து கலந்துரையாடினேன்.
இதன்போதுமலையக இளைஞர் யுவதிகள் தற்பொழுது எதிர்நோக்கி வருகின்ற வேலையில்லா பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்களுடைய உயர் கல்வி தொடர்பாகவும் தொழிலுக்கு ஏற்ற பயிற்சிகளை வழங்குவது தொடர்பாகவும் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்ற தொழில் பயிற்சி நிலையங்களில் மலையக பகுதிகளுக்கு ஏற்ற பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மலையக இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டுமாக இருந்தால் மலையக பகுதிகளில் சிறிய அளவிலான இந்திய முதலீட்டாளர்களை வரவழைத்து மலையகத்தின் பரந்த அளவில் தொழில் பேட்டைகளை உருவாக்க வேண்டும்.
இன்று இந்திய முதலீடுகள் அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.இதன் காரணமாக அந்த தொழிலை பெற்றுக் கொள்வதில் எமது மலையக இளைஞர்கள் பெறும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.தற்போதைய கொரோனா தொற்றும் பெரிய தாக்கத்தை செலுத்துகின்றது.
எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாக இருந்தால் மலையக பகுதிகளில் தொழில் பேட்டைகளை அமைக்க வேண்டும்.அப்படி அமைத்தால் நிச்சயமாக அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் முழமையாக பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் மலையக மாணவர்களின் உயர் கல்வியிலும் தற்பொழுது இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றதை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான அக்கரை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.
இன்று பல தொழில் பயிற்சி நிலையங்களில் முன்னெடுக்கப்படுகின்ற பயிற்சிகள் மலையக பகுதிகளில் தொழில் வாய்;ப்பிற்கு ஏற்றதாக இல்லை எனவே அவற்றை மலையக இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பையும் அதற்கு ஏற்ற வகையிலும் பயிற்சிகள் அமைய வேண்டும் மேலும் எங்களுடைய கலை கலாச்சாரம் மற்றும் சமய விடயங்கள் தொடர்பாகவும் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன்.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் தான் மிகுந்த கவனம் செலுத்துவதாக கண்டி இந்திய உதவி தூதுவர் ராகேஸ் நடராஜன் தெரிவித்ததுடன் இது தொடர்பாக முழுமையான அறிக்கை ஒன்றையும் பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டார்.இது தொடர்பான அறிக்கை ஒன்றை தான் மிக விரைவில் கையளிக்கவுள்ளதாகவும் பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சங்கரன் விஜயசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.










