டி20 உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் வலுவான பந்துவீச்சு என்று பலமான அணியாக களமிறங்கியுள்ள நியூசிலாந்து மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எதிர்பார்ப்புடன் இன்றைய தினம் களமிறங்கவுள்ளது.
நியூசிலாந்து கடந்த டி20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிவரை முன்னேறிய நிலையில் அவுஸ்திரேலியாவிடம் கிண்ணத்தை பறிகொடுத்தது. எனினும் அவுஸ்திரேலியாவை 89 ஓட்டங்களால் தோற்கடித்து இம்முறை உலகக் கிண்ணத்தை ஆரம்பித்த நியூசிலாந்து சுப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மாத்திரமே தோல்வியை சந்தித்தது.
அணித்தலைவர் கேன் வில்லியம்ஸ் முதற்கொண்டு பின் அலன், கிளன் பிலிப்ஸ், டெவோன் கொன்வோய், ஜேம்ஸ் நீஷம் என்று நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசை வலுவாக இருப்பதோடு பந்துவீச்சில் டிம் செளதி, ட்ரென்ட் போல்ட் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். ஆரம்பப் போட்டியில் இந்தியா மற்றும் சிம்பாப்வேயிடம் தோற்று கடைசி வரை அரையிறுதிக்கு முன்னேறுவது நிச்சயமின்றியே பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் ஆடியது. எனினும் தென்னாபிரிக்க அணி நெதர்லாந்திடம் தோற்றதை அடுத்து கிடைத்த வாய்ப்பைக் கொண்டு பங்களாதேஷை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆரம்ப வீரராக வரும் மொஹமட் ரிஸ்வான் மற்றும் அணித்தலைவர் பாபர் அசாம் தவிர்த்து மத்திய வரிசை துடுப்பாட்டம் இன்னும் ஸ்திரமற்றதாகவே உள்ளது. எனினும் ஆரம்ப வரிசை நின்றுபிடித்து ஆடினால் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் அணியில் உள்ளனர். ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவுப் என்று பாக். பந்துவீச்சு வரிசை வலுவாக உள்ளது. அது எதிரணி துடுப்பாட்ட வரிசையை ஆட்டங்காணச் செய்தால் போட்டி பாகிஸ்தான் அணிக்கு சாதகமாகிவிடும்.
போட்டி நடைபெறும் சிட்னி கிரிக்கெட் மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சாதகம் கொண்டது. இங்கு நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றிருந்தது. பாகிஸ்தானும் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது.










