இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.
புதுடில்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில்,
“இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.” – என்று பதிவிட்டுள்ளார்.
“இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கல்விச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.” – என்று இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.