இந்து சமுத்திரத்தின் முத்து எனப் போற்றப்படும் இலங்கைக்கு இந்தியாவைப்போலவே – இயற்கை அன்னையும் ஆசிகளை அள்ளி வழங்கியுள்ளார் என்றே கூற வேண்டும். நாட்டின் அமைவிடம், இயற்கை வளம், காலநிலை என அத்தனை அம்சங்களும் சுற்றுலாத்துறையை கவரும் வகையில் அமைந்துள்ளன. அதனால்தான் உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்களில் இலங்கையும் பிரதான இடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறையும் காத்திரமான பங்களிப்பை வழங்குகின்றது. அந்நிய செலாவணி, வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறையின் இருப்பு காப்பு உள்ளிட்ட விடயங்களுக்கும் பெரும் உதவியாக அமைந்துள்ளது. இவ்வாறு இலங்கைக்கு எல்லா வழிகளிலும் கைகொடுக்கும் சுற்றுலாத்துறையிலும் அண்டை நாடான இந்தியாவின் பங்களிப்பே அளப்பரியது. சுருக்கமாக சொல்வதெனில் சுற்றுலாத்துறை இன்று மீண்டெழுகின்றதெனில் அதற்கும் இந்தியாவே ‘ஒட்சீசன்’ வழங்கியுள்ளது.
இலங்கைக்கு 2023 ஏப்ரல் ஒன்று முதல் 16 ஆம் திகதிவரை 56,402 சுற்றுலா பயணிகள் வருகைதந்த நிலையில் அதில் 17 வீத பங்களிப்புடன் இந்தியா முன்னிலை வகித்தது. அதிகளவான இந்தியர்களே வருகை தந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாட்டவர்கள் உள்ளனர். இலங்கையில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்த தருணங்களிலும் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை குறைவில்லை. 2022 நவம்பர் மாதத்தை எடுத்து கொண்டால் இலங்கைக்கு வருகை தந்த 42 ஆயிரம் சுற்றுலா பயணிகளில் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். இதன்மூலம் இலங்கை சுற்றுலாத்துறை வளர்ச்சியின் இந்தியாவின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாகின்றது.
இதன்மூலம் டொலர் உள்ளீர்ப்பு இடம்பெற்றது, சுற்றுலாத்துறையில் வேலை இழந்து காணப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன என இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு கிடைத்த வாய்ப்புகள் ஏராளம்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சுற்றுலாத்துறை முழுமையாக ஆட்டம் கண்டது. சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல்கள்மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் சுற்றுலாத்துறை மீண்டெழுமா என்ற ஐயம் ஏற்பட்டது. பல நாடுகள் சுற்றுலாப்பயணத்துக்கு இலங்கையை கறுப்பு பட்டியலில் இணைந்தன. இராஜதந்திரிகள்கூட நாட்டுக்குவர அஞ்சினர்.
இந்நிலையில்தான் இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு நம்பிக்கையளித்தார். அவரின் வருகையானது இலங்கை வழமைக்கு திரும்பிவிட்டது, அங்கு சுற்றுலா செல்ல முடியும் என்ற தகவலை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றது. பாரத பிரதமரின் அன்றைய விஜயத்தை ஒரு சிலர் சாதாரண சம்பவமாக பார்த்திருக்கலாம். ஆனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என்பதை பின்நாட்களில் புரிந்து கொண்டனர். அவரின் இலங்கை விஜயத்தின் பின்னரே சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க ஆரம்பித்தனர். பெருமளவான இந்தியர்கள் இங்கு வந்து நாட்டுக்கு நம்பிக்கையளித்தனர். மறை பெறுமதிக்கு சென்றிருந்த இலங்கை சுற்றுலாத்துறை இதன்மூலம்தான் ஏற்றம் கண்டது. இராஜதந்திரிகள், முதலீட்டாளர்கள் என பலரும் வந்தனர்.
இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டவேளை வரிசை யுகம் உருவானது. நாட்டில் கொந்தளிப்பு நிலை காணப்பட்டது. அப்போது பல நாடுகள் இலங்கை செல்ல தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்தன. ஆனால் போதுமானளவு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லுமாறு உற்சாகப்படுத்திய ஒரே நாடு நம் அயல்நாடு இந்தியாதான். அதுமட்டுமல்ல இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டவேளை, விமானங்களுக்கு தமது நாட்டில் எரிபொருள் நிரப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க முன்வந்ததும் இந்தியாதான் என்பதை மறந்துவிடக்கூடாது.
இலங்கை மற்றும் இந்திய கலாசாரங்கள் பெரும்பாலும் ஒத்துபோகின்றன. உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட விடயங்களிலும் ஒத்த பண்புகள் காணப்படுகின்றன. சுற்றுலா வருபவர்கள் ஆன்மீக வழிபாட்டு தளங்களுக்கும் செல்கின்றனர். ஒரு சிலர் நிகழ்வுகளைக்கூட செய்கின்றனர். இதன்மூலம் இந்தியர் ஒருவர் இலங்கையில் செலவிடும் டொலர்கள் அதிகம். அதன்மூலம் நாட்டுக்கு டொலர் வருமானம் அதிகரிப்பதுடன், சுற்றுலாத்துறையில் புதிய வாய்ப்புகளும் உருவாகின்றன. அதனால்தான் இந்திய பயணிகளை மென்மேலும் கவரும் நோக்கில் சனத் ஜயசூரிய, ‘மெனிக்கே மகே ஹித்தே’ புகழ் பாடகி எல்லாம் இந்தியாவுக்கு சென்று, சுற்றுலாசார் பிரசாரங்களை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை, இந்திய பயணிகள் படகுசேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், வர்த்தக வாய்ப்புகளும் மேலும் விஸ்தரிக்கப்படும். அதன்மூலம் இலங்கை மேலும் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இலங்கையில் சினிமா படப்பிடிப்புகளுக்குரிய உரிய வசதி வாய்ப்புகளை (நவீன தொழில் நுட்பம் உள்ளடங்கலாக) ஏற்படுத்தினால் இந்திய பிரபலங்கள் அடிக்கடி நாட்டுக்கு வரக்கூடும். அதன்மூலமும் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தி, சுற்றுலாத்துறை ஊடாக இலங்கை எதிர்பார்க்கும் இலக்குகளை அடையக்கூடியதாக இருக்கும்.