மலையக மக்களின் சமூக நிலை மாற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் இயக்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடுகள் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகேணசன் பாராளுமன்றத்தில் விமர்சனம் செய்திருப்பதானது அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிபடுத்தும் ஒரு செயற்பாடாகும் என பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சென்னன் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;
” மலையக மக்கள் நலன் தொடர்பாக அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், தமது கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த காலகட்டத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியில் தனிவீடுகளை அமைத்து குடியமர்த்தி மலையக மக்களின் காணி, வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றதாக கூறி 50 வருடங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களில் பங்காளியாகி அமைச்சுப் பதவிகளை வகித்த இ.தொ.கா என்ன சாதித்து விட்டதென கேள்வி எழுப்பியிருந்தார்.
கூட்டணியினர் முன்னெடுத்த அபிவிருத்தி பணிகளை நாம் மறுக்கவில்லை.
எனினும் இ.தொ.கா மலையக மக்களின் நலன் குறித்து மேற்கொண்ட பணிகளை மறுதலித்து பேசுவதை ஏற்றுகொள்ள முடியாது.
இ .தொ.கா. மலையக பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்க காரணமாகி சமூக மாற்றத்திற்கு வித்திட்டதை எவரும் மறந்துவிட முடியாது. பொலிஸ் உத்தியோகத்தர் நியமனம், கிராம சேவை உத்தியோகத்தர் நியமனம்,சமூர்த்தி உத்தியோகத்தர் நியமனம் என பல அரச நிறுவனங்களில் எம்மவர் காலூன்ற நாமே செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.
யதன்சைட் ஆசிரியர் பயிற்சி கலாசாலை, ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரி, தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் போன்றவை மலையகத்தில் உருவாக இ.தொ.கா காரணமாகியது. மலையகத்தில் தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படவும், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் நாம் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றோம். மலையக பெண்களின் வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம். நாம் அரசியல் இலாபத்திற்காக மக்களை அடமானம் வைத்து செயற்படும் இயக்கமில்லை என்பதை மக்கள் நன்கறிவர். நாமே தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக காரணமாகினோம்.
எம்மை விமர்சனம் செய்யும் கூட்டணியினர் தாம் அமைச்சு பதவிகளை வகித்தபோது பிரதமராக இருந்து மலையக அபிவிருத்திக்கு உதவிய ரணில் விக்கிரமசிங்கே இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார் என்பதை மறந்துவிட்டு கருத்துக்களை முன்வைக்கக் கூடாது எமது பொதுச் செயலாளர் இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பல சந்தர்ப்பங்களில் சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்படும் சமிக்ஞையை வெளிப்படுத்தி முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார்.சமூக அக்கறை குறித்து தம்பட்டம் அடிப்பவர்கள் சுய அரசியல் இலாபத்திற்காக செயற்படாது சமூக விடிவிற்காக ஒன்றிணைவதே காலத்தின் தேவை என்றார்.
பசறை நிருபர்
.
