மத்திய மாகாண நிர்வாகத்தின் அக்கறையற்ற போக்கினாலேயே எஞ்சியுள்ள மத்திய மாகாண உதவி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் இழுத்தடிக்கப்படுகிறது. உதவி ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது அவர்களின் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் இன்னும் 140 உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இருக்கிறது. இவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு நாம் பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வந்திருக்கிறோம்.
ஆனால் இதுவரை மத்திய மாகாண நிர்வாகம் இவ்விடயத்தில் முழுமையான கவனம் செலுத்தவில்லை. இது சம்பந்தமாக மத்திய மாகாண சபையால் பொருத்தமற்ற காரணங்கள் கூறப்பட்டு இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் முற்றாக புறக்கணிக்கப்படுகிறது. இது ஆசிரியர் உதவியாளர்கள் அடிப்படை உரிமை மீறலாகும்.இப்போது தாங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவது மத்திய மாகாண அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலாகும்.
கடந்த காலங்களில் இருந்த மத்திய மாகாண பிரதான செயலாளர் மற்றும் கல்வி செயலாளர்கள் ஆசிரியர் உதவியாளர்களுக்கு எவ்வாறு நியமனத்தை வழங்கலாம் என்று சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வந்தனர். ஆனால் தற்போதைய கல்வி நிர்வாகம் எவ்வாறு இந்த விடயத்தை தட்டிக் கழிக்கலாம் என்பதில் காலத்தை கடத்தி வருகின்றது.
மாகாணத்துக்கு மேலதிக ஆளணியினர் இணைத்துக் கொள்ளப்படும் போது மட்டுமே மத்திய அரசாங்கத்தினதும் திரைச்சேறியினதும் அங்கீகாரம் மாகாண சபைக்கு தேவைப்படும். ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆளணியில் குறைவு ஏற்பட்டால் அந்த நிதியை பயன்படுத்தி புதிய நியமனங்களை வழங்க முடியும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தொழிலில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசின் நிதியை எதிர்பாராமல் கடந்த காலங்களில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன.
இதில் ஆசிரியர் உதவியாளர் நியமனம் பட்டதாரி நியமனம் மற்றும் தேசிய ஆங்கில டிப்ளமோ நியமனங்கள் என்பன வழங்கப்பட்டு வந்தன. கடந்த கால இந்த நடைமுறையை தற்போது பின்பற்றுவதற்கு மத்திய மாகாண சபை ஏன் தயங்குகிறது? ஒருவேளை இந்த ஆசிரியர் உதவியாளர்கள் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் பாடசாலைகள் படிப்பிக்கின்ற ஆசிரியர்கள் என்பதாலா? என்ற எண்ணம் தமிழ் ஆசிரியர்கள் மத்தியில் எழுவது சாதாரணமாகும்.
3000 ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் 2015 ஆம் ஆண்டு தொடங்கி வழங்கப்பட்டு வந்தது. அன்றைய நல்லாட்சி அரசாங்கம் இந்த விடயத்தை சரியான முறையில் கையாளாததால் ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமன வழங்குவதில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டன.
இன்று உதவி ஆசிரியர்களுக்காக முன்னிலையில் வரும் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அன்று சரியான முறையில் செயல்பட்டிருந்தால் நல்லாட்சி காலத்திலேயே இவர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கி இருக்க முடியும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியால் 2500 க்கும் அதிகமான ஆசிரிய உதவியாளர்களுக்கு கட்டம் கட்டமாக நிரந்த நியமனம் வழங்கப்பட்டு தற்போது 140 ஆசிரியர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கும் நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருந்தாலும் இவ்விடயம் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டு வருவதால் ஆசிரிய உதவியாளர்கள் தற்போது தமது நியமனத்துக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.










