“எதிரணிகள் எதற்காக ஒன்றுசேர முற்படுகின்றனவோ அந்த கனவு ஒருபோதும் நனவாகாது. எமது பயணத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் உள்ளது.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் பணம் வீணடிக்கப்படுவதை தடுத்து, புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முற்படுவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை கிடையாது எனவும் அவர் கூறினார்.
குருணாகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு ரணில் விக்கிரமசிங்க அரசாங்க வதிவிடத்தை கையளித்துவிட்டார், அதற்காக அவருக்கு நன்றி. கோட்டாபய ராஜபக்ச, ஹேமா பிரேமதாச ஆகியோரும் ஒப்படைத்துவிட்டனர். ஆனால் மூவர் மாத்திரம் கையளிக்க மறுக்கின்றனர்.
பணம் இல்லாமல் இல்லை, ஆனால் அதிகாரத்தையும், சுகபோகத்தையும் கைவிட அவர்கள் தயாரில்லை. மக்கள் பணத்தை வீணடித்தேனும் வாழ நினைக்கின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது. இந்த கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். அதனை நாம் செய்யும்போது அரசியல் பழிவாங்கல் என்கின்றனர்.
ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர், தனது மாத சம்பளத்தைக்கூட வங்கியில் இருந்து பெற மறந்துள்ளார். கடைசியில் அவரின் பிரத்தியேக செயலாளர் அந்த பணத்துக்கு வேட்டு வைத்துவிட்டார். அப்படியானால் இவர்களிடம் பணம் இல்லையா?
பாரிய வீடுகளை வழங்கமாட்டோம். செல்வதற்கு வழியில்லை என்றால் இருவர் வாழக்கூடிய அளவிலான வீடொன்றை வழங்குவோம்.
அதேவேளை எமக்கு பல சவால்கள் உள்ளன. அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். எனினும், அவர்கள் (எதிரணிகள்) குழப்பமடைந்துள்ளனர்.
அரசாங்கமொன்று ஆட்சிக்கு வந்து நிலையான நிலைமையை ஏற்படுத்துவதற்கு சிறுது காலம் எடுக்கும். அந்த காலப்பகுதிக்குள் குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு முற்படுகின்றனர்.
கடந்தகாலங்களில் பல அணிகள் இருந்தன. எல்லாம் ஒன்றாக இணைந்துவிட்டனர். அவர்களின் எண்ணம் ஈடேறாது.
மக்கள் எமது பக்கம் உள்ளனர் . எமது பயணத்துக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள். வெற்றியை நோக்கி செல்ல தமது பங்களிப்பை வழங்குவார்கள்.” – என்றார்.