தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என கூறி, அவர்களை தொடர்ச்சியாக அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் இன்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
” ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையின் பிரகாரம், தோட்ட சமூகத்துக்கும் வேலையற்ற இளைஞர்களுக்கும், விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத தரிசு காணிகளை வழங்கி, அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என வாக்குறுதி வழங்கியிருந்தோம்.
ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறான முற்போக்கு யோசனைகளை முன்வைத்திருந்த போதிலும், இந்த அரசாங்கத்தினது பொய் அரசியலை நம்பி வாக்களித்து அதிகாரத்தை மக்கள் பெற்றுக் கொடுத்தனர்.என்றாலும் துரதிஷ்டமாக இன்று இந்த மக்கள் கை விடப்பட்டுள்ளனர். முன்னைய அரசாங்கங்கள் கூறிய பொய்களோடு சேர்த்து தற்போது புதிய வகையான பொய்களையும் இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் கூறி வருகின்றன.” – எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.