பேருவளை பகுதியிலிருந்து இரத்தினக்கல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி, நிவிதித்திகலை, பலாங்கொடை, பெல்மதுளை, கஹவத்தை போன்ற பிரதேசங்களுக்கு சென்ற இரத்தினக் கல் வர்த்தகர்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் அவ்வப்பகுதிகளில் தங்கியிருப்பதாக தெரிய வருகிறது.
தமது சொந்த வாகனங்களில் எரிபொருள் பெற்றுக்கொண்டு சென்ற பல வர்த்தகர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் மீண்டும் திரும்பி வர எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் தொடர்ந்தும் அங்கு தங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுமதிப்பத்திரம் பெற்று இரத்தினக் கல் வியாபாரம் செய்வோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்தினால் தமது வாகனங்களுக்கு எரிபொருளை பெற்று வியாபாரத்தை இடையூறின்றி முன்னெடுக்க முடியும் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் ஒரு வியாபாரமாக இரத்தினக் கல் வியாபாரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
