“எரிபொருள் விலையில் நிச்சயம் மாற்றம்வரும். தற்போதைய சூழ்நிலையில் அது தவிர்க்கமுடியாததொன்று. எனவே, எந்த காலப்பகுதியில், எப்படியான மாற்றம் இடம்பெறும் என்பது குறித்து நிதி அமைச்சரும், துறைசார் அமைச்சரும் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பார்கள். ” – என்று வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதன்போது எரிபொருள் விலை சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறியவை வருமாறு,
” எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களை உலக சந்தையில் நிலவும் விலைக்கேற்பவே கொள்வனவு செய்யவேண்டிவரும். அந்தவகையில் உலக சந்தையில் சமையல் எரிவாயு, எரிபொருள், பருப்பு உட்பட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதற்கு புறம்பாக கப்பல் கட்டணம் உள்ளிட்ட சேவைகளின் விலைகளும் அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் அதிக விலைக்கு கொள்வனவு செய்து, இங்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு எரிபொருளை வழங்குவதால் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இவ்வாறு நஷ்டத்தில் இயங்கினால் பெற்றோலிக்கூட்டுப்பாதனம் ஸ்தம்பித்துவிடும். எனவே, எரிபொருள் விலை மாற்றம் என்பது தவிர்க்கமுடியாததொன்று. அது எப்போது, எவ்வாறு இடம்பெறும் என்பது பற்றி துறைசார் அமைச்சரும், நிதி அமைச்சரும் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பார்கள்.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் இலங்கையைவிடவும் அதிக விலைக்கே அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பெருந்தொற்றின் பின்னர் உலகில் இவ்வாறான நெருக்கடி ஏற்படுவது வழமை. ஆனால் 2020 மற்றும் 2021 காலப்பகுதியிலேயே பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் தொழில் இழந்துள்ளனர். வறுமை மட்டம் அதிகரித்துள்ளது. ” – என்றார்.










