இலங்கை கடந்த வருடத்தில் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி மூலம் 15.1 பில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இது 2020இல் அறிவிக்கப்பட்ட 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 23% சதவீத அதிகரிப்பாகுமெனவும் தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, 2022 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு பொருள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி ஊடாக 15.12 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.
2020 ஆம் ஆண்டு 12.3 பில்லியன் டொலராக காணப்பட்ட வருமானத்தை ஒருவருட காலத்தில் 3.9 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளோம். 2 022 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பது எமது பிரதான இலக்கு என அமைச்சர் தெரிவித்தார்.இரண்டாம் உலகமகா யுத்தத்தை காட்டிலும் கொவிட் -19 வைரஸ் தாக்கம் பூகோள பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள நிலைமையில் இலங்கையர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இலங்கை எதிர்பார்த்த இலக்கை அடைந்துள்ளமைக்காக ஏற்றுமதியாளர்களுக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.










