மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில், ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று ஆரம்பமாகியது.
15 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.
10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.
ஏலப்பட்டியலில் 370 இந்தியர், 220 வெளிநாட்டவர் என்று மொத்தம் 590 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 229 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர். வெளிநாட்டை பொறுத்தவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா-47, வெஸ்ட் இண்டீஸ்-34, தென்ஆப்பிரிக்கா-33, இங்கிலாந்து-24, நியூசிலாந்து-24, இலங்கை-23 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
இங்கிலாந்தின் ஜாசன் ராய் உள்பட 48 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும். இந்த தொகையில் இருந்து இவர்களது ஏலம் தொடங்கும்.
