‘ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி ‘அவுட்’ ! ஓடி ஒளியமாட்டேன் என்கிறார் டோனி!!

துபாயில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சொதப்பலாக ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய போட்டியிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.  சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய போட்டியிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை பந்தாடியது.

இந்தப் போட்டியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து சென்னை முதல் அணியாக வெளியேறியது. போட்டிக்குப் பிறகு வரணணையாளர்களிடம் பேசிய சென்னை தலைவர்  டோனி கூறியதாவது:-

” எது தவறாக செல்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டியது அவசியம். இந்த ஆண்டு எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடினோம். அனைத்து வீரர்களும் வேதனை அடைந்துள்ளனர். எனினும் தங்களால் முடிந்ததை செய்தனர்.

எப்போதுமே சாதகமாக நடக்காது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இரண்டாவது போட்டியில் பேட்டிங் சரியாக அமையவில்லை. ராயுடு காயம் அடைந்தார். ஏனைய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவில்லை. பேட்டிங் ஆர்டரில் எங்களுக்கு தொடர்ந்து அழுத்தங்கள் ஏற்பட்டன. நல்ல தொடக்கம் அமையவில்லை என்றால் நடு வரிசை பேட்ஸ்மேன்களுக்கு கடும் சிரமம் ஏற்படும்.

கிரிக்கெட்டை பொருத்தவரை கடினமான கட்டங்களை கடந்தே ஆக வேண்டும். உங்களுக்கு சாதகமாக நடக்க வேண்டுமானால், சிறிது அதிர்ஷ்டமும் தேவை. இந்த தொடரை பொருத்தவரை எங்களுக்கான வழியில் அமையவில்லை. ஒட்டுமொத்தமாக மூன்று முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. இது கடினமாக அமைந்தது. இதுவும் ஒரு அங்கம் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் வருத்தத்தில் இருந்தாலும் சிரித்த முகத்துடனே இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும். வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். அடுத்த ஆண்டு தொடருக்கான நல்ல தயார் நிலையாக அடுத்து வரும் மூன்று போட்டிகளையும் மாற்ற வேண்டும். கேப்டன் ஓடி ஒளிய முடியாது. எனவே அனைத்து போட்டிகளிலும் நான் விளையாடுவேன்” என்றார்.

Related Articles

Latest Articles