ஒரு இலட்சம் கோடி பண மோசடி – அறுவர் கைது! சினிமாப்பாணியில் சம்பவம்!!

ஒரு இலட்சம் கோடி வெளிநாட்டு பண விவகாரம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்போது இவரது வங்கிக் கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபா பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கியுள்ளார். இதேவேளை கொழும்பில் வைத்து அவரது வங்கிக் கணக்கில் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இலங்கை ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது. எனினும் பணம் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு வந்துள்ளார்.

இந் நிலையில் நேற்று முன்தினம் குறித்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிற்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது. பொலிசார் அந்த குழுவினரை கைது செய்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் இளைஞனிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல், மற்றும் வவுனியா போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

இந் நிலையில் சந்தேகநபர்கனை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles