பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமைக்கான போராட்டத்தில் முழு மலையகமும் ஓரணியில் அணி திரண்டு ஈடுப்பட்டமை மலையக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியிருக்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
” தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் மலையக மக்களால் நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மலையகத்திலுள்ள அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், நகர வர்த்தகர்கள்,ஆசிரியர்கள்,முச்சக்கரவண்டி சாரதிகள், தனியார் பேருந்து சாரதிகள்,நடத்துனர்கள், அதன் உரிமையாளர்கள், இளைஞர்கள்,யுவதிகள் என பலர் ஆதரவு வழங்கினர். பெருந்தோட்டங்கள் இன்றைய தினம் முழுமையாக முடக்கப்பட்டமை பெருந்தோட்ட மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளது. அனைவருக்கும் நன்றி” – என்றும் அவர் கூறினார்.
