ஓட்டோவின் மேலதிக பாகங்களுக்கு தண்டப் பணம் விதித்த பொலிஸார்!- மேலதிக பாகங்களை உடைத்து வீசிய சாரதி

வவுனியாவில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் ஓட்டோ சாரதிக்குத் தண்டப் பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த ஓட்டோ சாரதி தனது வாகனத்தின் மேலதிக பாகங்களைத் தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் வவுனியாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை அரசால் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக ஓட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரித்துள்ளதுடன், அவற்றை அகற்றுவதற்குக் கால அவகாசமும் வழங்கியிருந்தனர்.

அந்தவகையில் வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, அந்தப் பகுதியினூடாகப் பயணித்த ஓட்டோ ஒன்றை வழிமறித்த பொலிஸார், ஓட்டோவில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப் பாகங்களை அகற்றுமாறு தெரிவித்திருந்ததுடன், தண்டக் குற்றப் பத்திரத்தையும் வழங்கியிருந்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த ஓட்டோ சாரதி பொலிஸாரின் முன்னிலையிலேயே குறித்த உதிரிப்பாகங்களைக் காலால் அடித்து உடைத்திருந்ததுடன், ஏனைய பாகங்களையும் கழற்றி வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சாரதியின் செயற்பாட்டை வேடிக்கை பார்த்த பொலிஸார் அமைதியாக அங்கிருந்து சென்றிருந்தனர்.

Related Articles

Latest Articles