கச்சத்தீவு குறித்து இந்திய அரசுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதா?

இந்தியா வழங்கியுள்ள கடனை இரத்துசெய்துகொள்வதற்காக இலங்கையில் வடக்கு கடல் எல்லை மற்றும் கச்சதீவு ஆகிய விவகாரம் தொடர்பில் அந்நாட்டுடன் அரசு ஏதேனும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதா என்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்திய மீனவர்களுக்கு வடபகுதிக்கு வருவதற்கு ‘பாஸ்’ நடைமுறை வழங்குவது தொடர்பில் பேச்சு நடத்தப்படுகின்றது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன இந்திய ஊடகமொன்றுக்கு அறிவித்திருந்தார். அதேபோல இலங்கைக்கு கக்கதீவை வழங்குவதற்கு இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கை வரலாற்று தவறு என இந்திய பிரதமர் அண்மையில் அறிவித்ததையும் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியா சென்றிருந்தார்.

எனவே, வடக்கு கடல் எல்லை குறித்தும், கச்சதீவு குறித்தும் இந்திய கடனை இரத்துசெய்துகொள்வதற்காக ஏதேனும் உடன்பாட்டுக்கு வந்துள்ளீர்களா? இது தொடர்பில் வடக்கு மீனவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். அவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது. எனவே, இது தொடர்பில் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது வடக்கு கடற்பரப்புக்குள் வந்து இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு எமது நாட்டு கடல் வளத்தை இல்லாதொழிக்கின்றனர். ஆனால் கைது செய்யப்படும் அவர்கள் இந்தியாவின் அழுத்ததால் விரைவில் விடுவிக்கப்படும் நிலைமையும் காணப்படுகின்றார்.” – என்றார் நிரோஷன் பெரேரா.

Related Articles

Latest Articles