கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டை சுற்றி வளைக்க இடமளிக்காதீர் – டிலான் பெரேரா கோரிக்கை

எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றி வளைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுயாதீன எதிரணி உறுப்பினரான டிலான் பெரேரா சபையில் கோரிக்கை விடுத்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டைச் சுற்றிவளைக் கவுள்ளதாகக் குழுவொன்று அறிவித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இலங்கை கிரிக் கெட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் டிலான் பெரேரா இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அதன்போது டிலான் பெரேரா மேலும் கூறுகையில் –

“நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம் பலத்தை நான் சந்தித்தேன். அவர் நாளை (இன்று) நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர வேண்டும் என்ற போதும், அவரால் வர முடியாது என்று கூறியுள்ளார். அதற்குக் காரணம் அவரின் கொழும்பிலுள்ள வீட்டைக் குழுவொன்று சுற்றிவளைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் சென்றே இவ்வாறு சுற்றிவளைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயமே. கஜேந்திரகுமார் எமது நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர். அவரின் தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டவராக இருக்கின்றார். இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்புக்கு அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொருக்கும் வேண்டியவாறு எம்.பிக்களின் வீடுகளைச் சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது. இதனால் தயவு செய்து அவருக்கும், அவரின் வீட்டுக்கும் தேவையான பாதுகாப்பை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.

இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் சமன் பிரிய ஹேரத், இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles