பண்டைய காலம் தொட்டு நாடு பிடிக்கும் முயற்சிகளில் பலம்மிக்க நாடுகள் ஏதோ ஒரு வழியில் ஈடுபட்டு வருகின்றன. ஆயுதங்களைக் கொண்டு நாடு பிடிக்கும் யுகம் மறைந்து தற்போது வணிக்கத்தின் மூலம் நாடு பிடிக்கும் தந்திரோபாயங்களையும் நாடுகள் கையாண்டு வருகின்றன. இதில் சீனா முன்னணி வகிக்கிறது. இதற்காக சீனா முன்னெடுக்கும் காய்நகர்த்தல்கள் கண்ணுக்குத் தெரியாதவை.
தென் கிழக்காசியா முதல் ஆபிரிக்கா வரை சீனா இந்த அணுமுறையைக் கையாண்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அல்லது சீனர்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களும், சீனாவின் முதலீடுகளும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். இதனைத்தவிர ஆபிரிக்க நாடுகளில் சீனா மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பேரில் முன்னெடுக்கும் திட்டங்கள் முக்கியமானவை. இவற்றுக்கு நடுவே இலங்கையையும் சீனா விட்டுவைக்கவில்லை.
இலங்கையின் தெற்கு முதல் வடக்கு வரை ஏதோவொரு விதத்தில் அல்லது முகத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. அல்லது நிலைநிறுத்த முயற்சிக்கிறது. வடக்கில் ஏதோவொரு வகையில் கால்பதிக்க சீனா பல முயற்சிகளை எடுத்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. ஆனால் தற்போது சீனா வடக்கில் வீசியுள்ள வலையில் மீனவர்கள் சிக்கியுள்ளனர்.
கடல் அட்டை வளர்ப்பு பண்ணைகள் இதுதான் சீனாவின் புதிய பொறி. அல்லது நவீன பொறி. வடக்கில் ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் பல ஏக்கர்களில் இந்த கடல் வளர்ப்பை சீனா முன்னெடுத்துள்ளது. இதில் கோடிகள் கொட்டும் என்ற ஆசை வார்த்தைகளைக் காட்டியுள்ளதால் மீனவர்களும் இதில் மிக ஆர்வமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இந்த கடல் அட்டை வர்த்தகம் என்பது நூறு வீதம் ஏற்றுமதியை குறிவைத்தே முன்னெடுக்கப்படுகிறது. கோடிகள் கொட்டினாலும், மிக விரைவில் சீனாவில் வலையில் இந்த மீனவர்கள் சிக்கியிருக்க வேண்டி ஏற்படுமோ என்ற அச்சமும் இருக்கிறது.
இலங்கைக்கு டொலர்கள் தேவை. மீனவர்களுக்கு வருமானம் தேவை. இதற்கு சிறந்தவழி கடல் அட்டை பண்ணைகள் என்ற வாசகத்தோடு மீனவர் மத்தியில் இந்த செயல்திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. கடல் அட்டை வளர்ப்பிற்காக சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்குவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்து வருகிறார். இந்த கடல் அட்டைகள் சீனா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நல்ல இலாபம் கிடைக்கும். நீங்களும் செய்துபாருங்கள் என்று வடக்கில் உள்ள மீனவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக சீனா நேரடி, மறைமுக அனுசரணையை தொடர்ந்து வழங்கி வருகிறது.
யாழ்ப்பாணத்தில், அரியாலை, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு, ஆகிய பிரதேசங்களில் இந்த பண்ணை வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. கிளிநொச்சி மாவட்ட்டத்தில் பூநகரியின் கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா, இரணதீவு ஆகிய பிரதேசங்களிலும் இந்தப் பண்ணைகளை காண முடிகிறது.
மன்னார் மாவட்டத்திலும் இந்தப் பண்ணை வியாபாரம் மீனவர்களை கவர்ந்துள்ளது. இதனால் மன்னாரிலும் வேகமாக இந்த பண்ணைகள் வியாபிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த தொழிலில் நல்ல இலாபம் கிடைப்பதால் சிறு மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடித்தொழிலைக் கைவிட்டு, கடல் அட்டை வளர்ப்பில் கால் வைத்துள்ளனர். இதில் இலாபம் கிடைப்பதால், தொடர்ந்து மீனவர்கள் இந்த தொழிலால் ஈர்க்கப்படுகின்றனர்.
ஆனால், இதில் நீண்டகால ஆபத்து தங்கியிருப்பதை இந்த மீனவர்கள் உணரவில்லை அல்லது யாரும் உணர்த்தவில்லை முன்வரவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது.
நல்ல இலாபம் கிடைக்கிறது என்றால் அப்படியென்ன ஆபத்து இருக்கிறது என்ற கேள்வி மேலோட்டமாக எழக்கூடும். கரையோரப் பிரதேசங்களை அண்டி இந்தப் பண்ணைகள் அமைக்கப்படுவதால், அன்றாட மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.
மனித வளமும், இடவளமும் சீனாவில் குவிந்துள்ள நிலையில் இலங்கையில் ஏன் சீனா, இவ்வளவு அக்கறைக் காட்டுகிறது என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது.
கடல் அட்டை சந்தையில் சீனாவையே தங்கியிருக்க வேண்டும். அதீத இலாபம் கிடைத்து கடல் அட்டைப் பண்ணை வளர்ப்பில் பெரும்பாலானவர்கள் ஈடுபடுவது பொருளாதார ரீதியாக சீனாவிடம் சிக்கிவிடும் அபாயமும் இருக்கிறது. இதனால் சிறு மீனவர்கள் தமது மீன்பிடித் தொழில்களை முன்னெடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. திடீரென்று கடல் அட்டைப் பண்ணைகளில் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், அதன்பின்னர் மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடித் தொழிலைக்கூட மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலையும் ஏற்படக்கூடும்.
இலங்கையின் கடற்பிரதேசத்தில் வடக்கில் சிறந்த மீன் வளம் இருப்பதை அனைவரும் அறிவோம். தெற்கில் இருந்துகூட மீனவர்கள் வடக்கு கடல் பிரதேசத்திற்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுவதாக வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சிறந்த மீன்வளம் உள்ள பிரதேசத்தில் மீனவர்கள் இவ்வாறு கடல் அட்டைப் பண்ணைத் தொழிலில் ஈடுபடுவதும், இதனால் சிறு மீனவர்கள் வேறு தொழிலை நாடிச் செல்வதும் எதிர்காலத்தில் மீன்பிடித் தொழில்துறையில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது கடல் அட்டை வளர்ப்பு வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சீனாவும் இதனை வெகுவாக ஊக்குவித்து வருகிறது. தற்போது டொலர்கள் கொட்டினாலும், எதிர்காலம் என்னவாகும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.