யாழ். பலாலி பாதுகாப்பு வலயத்திலுள்ள வீதிகள் திறக்கப்பட்டதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான நடவடிக்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்;ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பொன்சேகா இவ்வாறு கூறினார்.
“ இலங்கையில் மீண்டும் போர் ஏற்படாது என்பதை எந்த வகையில் ஊகிக்க முடியும். கனடாவில் தற்போது இனப்படுகொலை நினைவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் வாழும் டயஸ்போராக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவியால்தான் புலிகள் அமைப்பு வளர்ச்சி கண்டது.
ஆணையிறவு மற்றும் பலாலி பாதுகாப்பு வலயங்களில் இருந்த முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமை ஏற்புடையது அல்ல. படையினர் முகாம்களுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றில்லை. வெளியில் விரைவாக செயற்படக்கூடிய இடத்திலும் இருக்க வேண்டும்.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
10 தற்கொலை குண்டுதாரிகள் வந்தால்? அவ்வாறான 10 பேரை யாழில் உருவாக்குவது கனடாவில் உள்ள செல்வந்தர்களுக்கு பெரிய விடயமாக அமையாது. எனவே, படையினர் வெளியிலும் விழிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது.
ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் நூற்றுக்கணக்கான முகாம்களை அமைக்க நேரிடும். அவ்வாறான நிலை ஏற்படாதிருப்பது பற்றி அவதானம் செலுத்த வேண்டும். குதிரை ஓடிய பின்னர் கடிவாளம் பூட்டி பயன் இல்லை.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரையிலான இராணுவம் உள்ளது. அந்த எண்ணிக்கை குறைக்கப்படக்கூடாது.”- என பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.
