கனேமுல்ல சஞ்சீவ கொலை: தலைமறைவாகியுள்ள செவ்வந்தியை வலை விரித்து தேடும் பொலிஸார்!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாக கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலிற்கமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொலையின் பின்னர் அவர் காணாமல் போன நிலையில் பெண் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் அந்தப் பெண் இந்த நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மத்துகமவில் பல இடங்களில் நேற்று சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறி, அந்தப் பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 3 சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் என கொழும்பு குற்றப்பிரிவு நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

Related Articles

Latest Articles