கம்பளை பகுதியில் இரு வீடுகளில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு: தம்பதியினர் குறித்து தீவிர விசாரணை!

 

ஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை சோதனையிட்ட பொலிஸார், ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கம்பளையில் இருந்து கினிகத்தேனைவரை ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் கடந்த 25 ஆம் திகதி நாவலப்பிட்டியவில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நாவலப்பிட்டிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். கணவனுக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பொலிஸாரால் பெற்றப்பட்டிருந்தது. ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 22 வயதான கணவரை அழைத்துக்கொண்டு, அவர்கள் தங்கி இருந்த மூன்று வீடுகளை நேற்றும், இன்றும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது இரு வீடகளில் இருந்து ஐஸ்போதைப்பொருள், உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கம்பளை, துனுகேஉல்ல வீதியில் உடகம – அங்கெலபிட்டிய பகுதியிலுள்ள வீடு, கம்பளை, தொலஸ்பாகை வீதியில் சிங்ஹாபிட்டிய பகுதியில் உள்ள வீடு என்பவற்றை சோதித்தபோதே ஐஸ் பக்கெட்டுகள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரான ஆண் இரு திருமணங்கள் செய்துள்ளார். முதல் மனைவிக்கு 15 மாத குழந்தையொன்று உள்ளது என தெரியவந்துள்ளது.

க.யோகா

Related Articles

Latest Articles