கம்பிப் பொறியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில், தேயிலை மரமொன்றில் வைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறியில் சிக்கி நன்கு வளர்ச்சியடைந்த மலைச் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (10) குறித்த சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதால், தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் மற்றும் கறவை மாடுகளை அவை வேட்டையாடுவதைத் தடுக்கவே இந்தப் பொறி வைக்கப்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று (09) இரவு இந்தப் பொறியில் சிறுத்தை சிக்கியிருக்கலாம் என்றும், அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுக்கப்பட்டதால் மூச்சுத்திணறி சிறுத்தை உயிரிழந்திருப்பதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், தோட்ட நிர்வாகம் ஊடாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பகவந்தலாவை காவல்துறையினர், தேயிலைத் தோட்டத்தின் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மேலும் பல கம்பிப் பொறிகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றியுள்ளனர்.
மேலதிக பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை மருத்துவ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.










