கறுப்பு ஜூலையானது இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது என்று கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
” நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இலங்கை வரலாற்றில் கருப்பு ஜூலை ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது.” – எனவும் மேற்படி அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக் கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியது.
மேலும் 2022 ஆம் ஆண்டில் கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்தது. இது உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்பாகும்.
இந்தக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்வதில் கனடா , தமிழ்-கனடியர்களுடன் நிற்கிறது.” – எனவும் கனடா பிரதமர் அறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளார்.










