காவிடை தரித்துக்கொண்டு ‘காடையர்’ போல் செயற்படும் அம்பிட்டிய தேரரை உடன் கைது செய்க! திகா வலியுறுத்து

காவி உடை தரித்துக்கொண்டு காடையர்போல் செயற்படும் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கம்/ முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழர்களை வெட்டுவேன் என மிரட்டியுள்ள தேரரின் கூற்றையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு,

” புத்த பெருமான் அன்பையும், அகிம்சையையும் , நல்வழியையுமே இவ்வுலகுக்கு போதித்தார். ஆனால் அவர் வழியில் நடப்பதாகக்கூறி காவி உடை தரித்துள்ள அம்பிட்டிய சுமன தேரர், தெருவுக்குவந்து ‘கூத்தாடி’போல் கொக்கரித்துக்கொண்டிருக்கின்றார். தமிழர்களை வெட்டுவேன், கொத்துவேன் என சினிமாப்பட ‘ரௌடிகள்’போல் எச்சரித்துவருகின்றார். இவ்வாறு யார் செயற்பட்டாலும் அது தவறுதான். இந்நாட்டில் உள்ள சட்டம் அனைவருக்கும் சமம் எனில், குறித்த தேரர் உடன் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அம்பிட்டிய தேரருக்கு ஏதேனும் அநீதி இடம்பெற்றிருந்தால் நீதியை பெறுவதற்கு சட்டரீதியிலான வழிகள் உள்ளன. அதைவிடுத்து சட்டத்தை கையில் எடுத்து செயற்பட முற்படுவது காட்டுமிராண்டித்தனம். அதுவும் தமிழர்களை எச்சரித்து, இனவாதத்தை தூண்டும் அவரின் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. இது சம்பந்தமாக ஜனாதிபதியும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார் திகாம்பரம்.

Related Articles

Latest Articles