காஷ்மீர் நட்புறவு தினம் என்ற பேரில் பயங்கரவாதத்தை விதைக்கும் பாகிஸ்தான்!

காஷ்மீர் நட்புறவு தினம் என்ற பேரில் இந்தியாவில் பயங்கரவாதத்தை விதைக்கும் வகையில் பாகிஸ்தான் இழிவான பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தொடர்ச்சியான பொய்களையும், திரிபுபடுத்திய தகவல்களையும் கூறிவருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஒவ்வொருவருடம் பெப்ரவரி 5ஆம் திகதி ”காஷ்மீர் நட்புறவு தினம்” என்று பாகிஸ்தான் கொண்டாடி வருகிறது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் திட்டமிட்ட, இழிவான பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைப் பொதுக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதுடன், அதன் மையமாக தொடர்ந்து இயங்கி வருகிறது என்றும், இது தெற்காசியாவைக் கடந்து பரந்து, விரிந்துள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் சில குறிப்புகளை முன்வைத்திருந்தது. இதனையடுத்து பதிலளிக்கும் உரிமையின் அடிப்படையில் இந்தியா இதற்கான விளக்கத்தை முன்வைத்தது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக இவ்வாறான போலியான, ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை மீண்டும், மீண்டும் கூறிவருவதாக இந்தியா தெரிவித்தது. அத்துடன், ஐ.நா. சபைக் கூட்டத்தை தனது போலிப் பிரசாரத்திற்காக பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி வருகிறது.

 

காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை என்று பாகிஸ்தான் கூறியதை அடுத்து, இந்தியா இதற்கான பதிலை வழங்கியுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்திற்கும், அதற்கு அப்பாலும் பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் தொடர்ச்சியான, இழிந்த பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் குறித்து தவறான கதையை பாகிஸ்தான் பரப்புகிறது. இதற்கு முன்னரும் பாகிஸ்தான் இதுபோன்ற அவதூறுகளை செய்த போதிலும், அவை வெற்றியளிக்கவில்லை. இந்த இழிவான முயற்சிகளை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் திகதி நடைபெற்ற பொதுச் சபை பாதுகாப்புக் கூட்டத்தொடரில் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் குறிப்பை இந்தியா முற்றிலுமாக நிராகரித்தது. ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட இழிந்த முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வியடைந்துவிட்டன.

பெப்ரவரி 5-ம் திகதியை காஷ்மீர் ஒற்றுமை தினம் என்று பாகிஸ்தான் அனுசரித்து வருகிறது. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தினத்தை பாகிஸ்தானில் அனுஷ்டித்து வருகிறது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திலும் இதனை கொண்டாடியது.

“ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்சனை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும், பாதுகாப்பு கவுன்சில் அதன் சொந்த தீர்மானங்களை செயல்படுத்தி பேரழிவினை தடுக்க வேண்டும். இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் இந்திய அரசின் மிருகத்தனமான செயல்களால் காஷ்மீரில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையானது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது ” என்றும் உயர் ஸ்தானிகர் சுட்டிக் காட்டினார்.

இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் மனித உரிமை மீறல்களை சித்தரிக்கும் படங்கள் இந்நிகழ்வின் புகைப்படக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதோடு, இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரின் அழகிய பிரதேசங்கள் மற்றும் இந்திய படைகளின் வன்முறையை வெளிப்படுத்தும் டிஜிட்டல் வீடியோக்களும் இந்நிகழ்வின் போது காண்பிக்கப்பட்டன.

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று பாகிஸ்தான் இந்த தினத்தை அனுசரித்தாலும், இந்த தினத்தில் பாகிஸ்தானில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.

‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ எனக் கூறி இந்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள சதித்திட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாக இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன. உளவுத்துறை தகவல்களின்படி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு இரகசிய தகவல் அனுப்பியுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்திருந்தன.

அதில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தூதரகங்கள் காஷ்மீர் ஒற்றுமை தினம் தொடர்பாக டுவிட்டரில் அறிக்கைகளை பதிவிடவேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருந்தது.

மேலும், இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பிரசாங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தூதரகங்களுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறையும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், பல்வேறு நாடுகளில் பாகிஸ்தான் தூதரகங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினம் என கூறி இந்தியா மற்றும் இந்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதனை வன்மையாக கண்டித்துள்ள இந்திய தரப்புகள் ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சியை தடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தது.

ஜம்மு காஷ்மீரில் 2019ஆம் ஆண்டு 370 மற்றும் 35ஏ சட்டங்கள் இரத்து செய்த பின்னர், இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்று தசாப்தங்களாக, ஸ்ரீநகர் பெருநகர் காஷ்மீரின் கிளர்ச்சியின் மையமாக இருந்தது. மத்திய அரசின் நடவடிக்கைகளினால் அந்த நிலைமை மாறியுள்ளது. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள சில அறிக்கைகள், அந்தப் பகுதிகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமாக அமையலாம் என்றும் குறிப்பிட்டுள்ளன.

ஆனால் ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் இலக்குகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளதாகவும், சுற்றுலாப்பயணிகள் படிப்படியாக பிரபலமான பகுதிகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

காஷ்மீர் முன்னர் வன்முறையைத் தொடர்வதை இலக்காக கொண்டிருந்தது. 2019 ஓகஸ்ட் 5, அன்று ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370இன் கீழ் வழங்கப்பட்டதை இரத்து செய்து, அப்பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது.

இதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் படிப்படியான நிலையான அமைதி மற்றும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் காஷ்மீர் ஒற்றுமை தினமென கூறி இந்தியாவை களங்கப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

Related Articles

Latest Articles